Pages

Sunday 5 December 2010

இந்திய தேசிய முஸ்லிம் தலைமைத்துவம் இல்லாமையின் விளைவு கருப்பு டிசம்பர் 06

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6  ஆம் திகதியுடன்  பூர்தியடைகின்றது  பாபர் மஸ்ஜித்  டிசம்பர் 6, 1992 அன்றுஇடிக்கப்பட்டது அதை தொடர்ந்து லிபரஹன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு குற்றவாளிகள் சிலர் அடையாளம்  காணப்பட்டனர் ஆனால் அந்த அறிக்கை வெறும் அறிக்கையாக மட்டும் தான் இன்றுவரை இருக்கிறது லிபரஹன் கமிட்டி அறிக்கை ஒரு கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே என இந்திய முஸ்லிம்கள் பார்க்கின்றனர் . குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ள எவரின் மீதும் எந்த  நடவடிக்கையும்  எடுக்க ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்திர  இடம்பிடிக்க முனையும் இந்திய    அரசு   இன்னும் முன் வரவில்லை.


அதேபோன்று மும்பை – குஜராத் முஸ்லிம் படுகொலை   பற்றிய சிறிகிருஷ்னா அறிக்கையில் அடையாளம் காண்பிக்கப்பட்ட பால் தாக்ரே மற்றும் சிவசேன பயங்கரவாதிகள்  மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அறிக்கையாக  மட்டும்  இருக்கிறது  பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  சிரிகிருஷ்னா அறிக்கையை முஸ்லிம்கள் மறந்துவிட்டது போலவே  லிபரஹான் அறிக்கையையும் மறக்கபட்டுகொண்டிருக்க    பெரும் இடியாக முஸ்லிம்களின் தலையில் இறங்கியதுதான் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு செப்டம்பர் 30 அன்று வழங்கிய  பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விரிவாக பார்க்க
அது ஒரு தீர்ப்பு அல்ல மிக மோசமான அயோக்கியத்தனம் நீதிபதிகள் என்ற பெயரில் அமர்திருந்த காவிகளின்  கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு இதையும் இந்திய முஸ்லிம்கள் விரைவில் மறந்து விடுவார்கள்போன்றுதான் தெரிகின்றது.
ஆண்டுதோறும் பாபர் மஸ்ஜித் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் நாடு  தவ்ஹீத் ஜமாஅத் இந்த ஆண்டு நாளை எந்த ஆர்பாட்டதிலும் இறங்கவில்லை என்று தெரிவித்துள்ளது  அதற்கு எந்த காரணத்தை அவர்கள் கூறினாலும் அது ஒரு பின் னடைவாகதான் பார்க்கப்படவேண்டும்  20  கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவில் முஸ்லிம்கள் மிகவும் பலவீனர்கள் என்பது வேடிக்கையாக இருந்தாலும் அவர்களின் உண்மை நிலை அதுதான் இந்திய முஸ்லிம்கள் எழுச்சி பெறவிடாமல் அவர்கள் திட்டமிட்ட முறையில் அடக்கப்படுகின்றனர்.
இந்தியா மிகவும் வறியவர்களை கொண்ட நாடுகளில் முதலாவது என்றால் அந்த வறியவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்தான் கல்வி, சுகாதாரம், அரசியல், பொருளாதாரம், போன்ற அணைத்து துறையிலும் இந்திய முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள் இது இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து எழுச்சி பெறுவதற்கு பெரும் தடையாக உள்ளது முஸ்லிம்களுக்கான தங்களை முதலில் முஸ்லிம்கள் என்று அடையாளபடுத்தும்  தேசிய முஸ்லிம் தலைமை இந்தியாவில் உருவாகாத நிலை தொடரும் வரை இந்திய முஸ்லிம்களை சூழ்ந்துள்ள ஒடுக்குமுறைகள் விடுபடாது என்பதுதான் உண்மை
கஷ்மீர் முஸ்லிம்களின் வலி இந்தியா ஒரு தேசம் என்று கூறும் முஸ்லிம்களுக்கு கூட வலிப்பதாக தெரியவில்லை அந்த அளவு மொழி, பிரதேச, தேசவாதங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா முஸ்லிம்களிடம் முஸ்லிம், இஸ்லாம் என்ற அடையாளங்கள் ஆதிக்கம் பெறுவது திட்டமிட்டு தடுக்கப்படுகின்றது. மொழி, பிரதேசம் ,தேசியம் என்ற பிரிவுகளுக்குள் முஸ்லிம்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளனர்
அஸ்ஸாம் மாநிலத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் பிரதேசத்தில்  திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்றது. 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இன்று வரை முஸ்லிம்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை
2002 ஆண்டில்  குஜராத்தில் அரங்கேற்றபட்ட  படுகொலைகள் முற்றிலும் தேசியம் பேசும்  அரசு ஆதாரவுடன் அதன் அடக்குமுறை இயந்திரங்களான   காவல் துறை, நீதித்துறை ஆதரவுடன் நடைபெற்றது
இதில் குறைந்தது  2500 பேர் கூடியது 5000 பேர் கொல்லப் பட்டனர். 2 லட்சம் மக்கள் அனைத்தையும் இழந்த அகதிகளாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும் வீடு திரும்பாத நிலை உள்ளது. இந்த கொடூரங்கள், படுகொலைகள் அனைத்தும் இந்தய மாநில அரசான  முதல்வர் நரேந்திரமோடி அரசாங்கத்தின் ஆசியுடனும் ஆதரவுடனும் நடை பெற்றது இந்த இன அழிப்பு படுகொலைகளுக்கு   வழமைபோன்று முஸ்லிம்களுக்கு இன்னும்  எந்த நீதியும் கிடைக்கவில்லை
இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை  ஒவ்வொரு மாநிலத்திலும் தினமும் நடைபெறும் சாதாரண விடயமாகிவிட்டது அவர்கள் நீதி கிடைக்காத தொடர் ஒடுக்கு முறைகளை எதிர்கொள்கின்றனர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றோம் என்று புலிகளுக்கு ஆதரவாக கொடியேந்தும் பல பெயர்தாங்கி முஸ்லிம்கள் இந்தியாவில் அதிலும் தனது சொந்த மாநிலத்தில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தினமும் நிகழும் ஓடுக்கு முறைகள் பற்றி எதுவும் தெரியாது இருப்பது வேடிக்கையானதும்   வேதனையானதுமாகும்
‘இந்தியாவில் தொப்பி அணிந்திருந்தால் போதும் பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.
அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்த இந்து பயங்கரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை; முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை. அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது. ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.
திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் வெறிக்கு லட்சக்கணக்கான இஸ்லாத்தை நோக்கிவரும் தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர். சினிமா கூத்தாடிகளும் ஊடகங்களும் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை’ என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே.  ‘உன்னைப் போல் ஒருவன்’ என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான். இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது’ என்று முஸ்லிம் அல்லாத நடுநிலையாளர்களால் விமர்சிக்கப்படும் நிலையை கூட இந்திய முஸ்லிம் சமுகம் உணர்வதில்லை என்றுதான் நினைக்கதுண்டுகின்றது
மிகவும் தெளிவான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொள்ளும் இந்திய முஸ்லிம்கள் முஸ்லிம், இஸ்லாம் என்ற அடையாளத்தை முதன்மை படுத்தி செயல்பட்டால் நிச்சயம் முஸ்லிம்கள் எழுச்சி பெறமுடியும் என்பது உண்மை இந்திய  தேசிய மட்டத்தில் அவ்வாறான தலைமைகள் இருப்பதாக தெரியவில்லை டாக்டர் ஜாகிர் நாயக் போன்றவர்கள் தேசிய முஸ்லிம் அரசியல் தொடர்பாகவும் செயல்பட முற்பட்டால் அது இருக்கும் நிலையிலிருந்து முஸ்லிம்களை எழுச்சி பெற உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படுகொலைகளையும்   அநீதிகளையும் அக்கிரமங்களையும் நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் எதிர்கொண்டும் இன்னும் இந்திய முஸ்லிம்கள் தேசிய முஸ்லிம் தலைமைத்துவம் பற்றி செயலற்று இருப்பது வேதனை தருகின்றது .
என்றாலும் மாநில மட்டங்களில் ஏற்பட்டு வரும் சில குறிப்பிட்ட எழுச்சிகள் வரவேற்க தக்கது அவை கண்டிப்பாக இஸ்லாம் , முஸ்லிம் என்ற தனித்துவ அடையாளங்களை எப்போதும்  முன் நிறுத்தி செயல்படவேண்டும் அப்போதுதான்  அது உண்மையான சாத்தியமான எழுச்சி பாதையில் பயணிக்கமுடியும் என்பது மட்டும் உண்மை, கடமை.
அவ்வாறன தேசிய தலைமை நோக்கிய நகர்வுகளை முஸ்லிம்கள் மேற்கொள்ள தவறினால் முஸ்லிம் எழுச்சி என்பதை கனவிலும் நினைக்கமுடியாது என்பதுடன் ஒடுக்குமுறைகளையும் தடுக்க முடியாது 20 கோடி முஸ்லிம்கள் என்பது சிறுபான்மை அல்ல அவர்கள் பெரும்பான்மை இந்திய முஸ்லிம்கள் இனியும் சிந்திக்கவில்லை என்றால் தினமும் பாபர் மஸ்ஜித் உடைப்பும் , குஜராத் படுகொலையும் நிகழ்வதை தடுக்கமுடியாது.
இஸ்லாமிய போதனைகளை யாப்பாக கொண்ட முஸ்லிம் என்ற அடையாளத்தை முதன்மை படுத்திய இந்திய தேசிய தலைமை ஒன்றின் தவிர்க்க முடியாத தேவை என்றோ இந்தியாவில் ஏற்பட்டுவிட்டது- இங்கு நான் முஸ்லிம் தலைமை என்று கூறுவது இஸ்லாமிய தலைமையை மட்டும்தான். (Our Umma)
Home            Sri Lanka Think Tank-UK (Main Link)

1 comment:

  1. pls add Name of the Writer of the Article -இந்திய தேசிய முஸ்லிம் தலைமைத்துவம் இல்லாமையின் விளைவு கருப்பு டிசம்பர் 06- and website from where copied- WWW.OurUmmah.org

    ReplyDelete